தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்ட நாகலிங்க மலர்கள்.

நாகலிங்க மலர்

இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்டது நாகலிங்க மலர்கள். தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்டது இந்த மலர்கள். மகரந்த தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், இதன் பெயரும் வித்தியாசம்தான். நாகலிங்க மரங்கள் நீலகிரி மழைப் பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்டது இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. 

கடல் கடந்து வந்த மரம்

பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறி விடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும். 


இதன் தாவரவியல் பெயர் கொரூபியா கினென்சிஸ். தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்ட இந்த மரம் லேசிதிடசாய் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது. இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. சிங்கள மொழியில் இது சல் என அழைக்கப்படுகிறது. 1755-ம் ஆண்டு பிரெஞ்சு தாவரவியல் அறிஞர் ழீன் பாப்டிஸ்ட் கிறிஸ்டோபர் இந்த மரத்துக்கு தாவரவியல் பெயரை சூட்டினார். 



நாகலிங்க பூக்கள்

ஆண்டு முமுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடி மரத்தில் இருந்து நேரடியாக கிளைகள் பெருகிவிடாத மரம். சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாக பூக்கும். நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும்.ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூட பூக்கலாம். பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது. பீரங்கி குண்டு மரம்
நாகலிங்க மரத்தின் காய்

பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாக கருதப்படுகிறது. நாட்டின் பல சிவாலயங்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இலங்கை புத்த மத வழிபாட்டிலும் இந்த மலர் முக்கியமானதாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இந்த மரத்துக்கு கேனான் பால் ட்ரீ (பீரங்கி குண்டு மரம்) என்று பெயர். மலர்களின் நறுமணம் கவர்ந்தாலும், காய்கள் உருண்டு பெருத்தவை. மரத்துக்கு கீழே நின்றால் எந்த நேரத்திலும் தலையில் விழுந்து பதம் பார்க்கும் அபாயம் உண்டு. 

மருத்துவ குணங்கள்

இந்த தாவரத்துக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. வலி நிவாரணம், உயர் ரத்த அழுத்தம், கட்டிகளைக் குணப்படுத்த அமேசான் பகுதி மக்கள் இந்த தாவரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல் வலி, சரும நோய்கள், வயிற்று வலி, மலேரியாவை குணப்படுத்தவும் இந்த தாவரம் பயன்படுத்தப்படுவதாக தகவல்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?